Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Wednesday, September 13, 2023

இந்த புன்னகை என்ன விலை -2

 படம் பார்த்து கதை சொல்


அம்மாவுக்கு செல்லம் 

 என் செல்ல அம்மா, தங்கக் கட்டி அம்மா ...... 

 டேய் ! என்ன விஷயம் சொல்லு ... 

 என் ஆசை அம்மா ...உனக்கு என்னை ரொம்பப் பிடிக்கும் தானே ? 

 என்னடா ? என்ன வேணும் இப்போ ? 

 என் பிரண்ட்ஸ் எல்லோரும் கபடி மேட்ச் பார்க்க போறாங்க, நானும் போகட்டுமா? 

 எந்த பிரண்ட்ஸ் ? 

 சாமி, தில்லை, நாகு ..... 

 எங்க ? எவ்வளவு தூரம் ? 

 இங்கதாம்மா, மேட்டுத் தெரு கோடியில, முள்ளியாத்து மணல்ல 

 இருட்டுறதுக்குள்ள வந்திடுவியா ?

 ஓ ...! 

 சரி  சரி , நல்லா சட்டையா பாத்து போட்டுக்கிட்டு போ, பரண் மேல பொரி உருண்டை இருக்கு. பிரண்ட்ஸ்க்கும் சேர்த்து கொண்டு போ.

 சரிம்ம்மா ......என் செல்ல அம்மா ... 

 சிட்டென பறக்கிறான் குட்டிப்பையன்.

சிறுவனின் முகத்தில் ஒரு கொஞ்சலான புன்னகை.

அதே சமயம்   வேலையில் ஆழ்ந்திருக்கும்  அன்னையின் முகத்தில் ஒரு  சந்தோஷமான  நமட்டு சிரிப்பு   இரண்டையும் ஒரு சேர கொண்டுவர வேண்டும் என்பதே  இந்த படத்தின் பெரிய சவால்.  

அதனால் படத்தில்  பின்னணி  போன்ற வேறு பல விஷயங்களில்  அதிக கவனம் காட்டவில்லை. 

முழு படமும் கீழே .

Sunday, June 18, 2023

இந்தப் புன்னகை என்ன விலை?

 பேரனுக்கு  விளையாடப் போகணும்.

அன்பான தாத்தா பிடிச்சு வைச்சுப் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்கிறார்.

அவனுக்கோ தன் நிலைமையை சொல்லி புரிய வைக்க முடியாத நிலையில் சிறிது பொறுமை காட்டுகிறான். அப்போது அவன் முகபாவம் எப்படி இருக்கும் ?

இப்படி இருக்குமா ?

பெரியவருக்கான ஒரு மரியாதை கலந்த அன்பை அச்சிறுவனின் முகத்தில் காண்பிக்க தனி முயற்சி எடுத்த சித்திரம் இது.

வெளிநாட்டு ஓவியங்களில் மோனலீசா வின் ( லியானார்டோ-டாவின்சி ) படத்தில் இருக்கும் -மர்மமான- புன்னகையை சிலாகித்து பல விற்பன்னர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.

அப்படி  ஒரு புன்னகையை ஏன் முயன்று பார்க்கக் கூடாது என்பதன் வெளிப்பாடுதான் இது. 

மோனாலீசா போல் இதில் ஏதும் மர்மம் இல்லை.  தாத்தா பேச்சைத் தட்டமுடியாமல்  ஒரு அசட்டு சிரிப்புடன் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறான். அவ்வளவு தான்.

முழுப்படமும் கீழே .




தாத்தாவின் கண்களில் உள்ள எதிர்பார்ப்பும் ஆளுமையும்,   சிறுவனின் மனநிலையை  பார்க்க விடாமல் செய்து விடலாம் என்ற எண்ணத்தோடு முதலில் சிறுவனைத் தனியாக  zoom- in  செய்து பின்னர் முழு படத்தையும் போட்டிருக்கிறேன். 

இவர்கள் குஜராத் ராஜாஸ்தான் மாநிலங்களில் ஒட்டகங்களை மேய்ப்பவர்கள்  'ராய்கா' எனப்படும் குடியை சேர்ந்தவர்கள். சுமார் பத்து லட்சம் ஜனத்தொகையாக இருந்த இந்த குடியினர் கடந்த முப்பது ஆண்டுகளில் இரண்டு லட்சமாக சிறுத்து விட்டனராம். இதனால் ஒட்டகப் பராமரிப்பு குன்றி ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதாம். தற்போது 2019 கணக்கின்படி ராஜாஸ்தானில் 21000 ஒட்டகங்களே உள்ளன.

இந்த சீரழிவைத் தடுக்க ராஜாஸ்தானில் ஒட்டக மேம்பாட்டு ஆராய்ச்சி ஏற்படுத்தப்பட்டு இறைச்சிக்காக  செய்யப்படும்  ஒட்டக வதைக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.  ஒட்டகத்தின் பால் மிக விசேஷமான மருத்துவ குணம் கொண்டது. மனநலம் குன்றிய குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கும் மிகுந்த பயன் உடையது.  மேலும் படிக்க...

ஹூம் !  இந்த  கதையெல்லாம் கேட்க விளையாடப் போகும் சிறுவனுக்கு ஏது நேரம் ?

 

Monday, May 29, 2023

கண்ணனை நினைக்காத நாளிலில்லையே...

 தமிழ் நாட்டில்  மாணிக்கவாசகர் சிவபெருமானை தலைவனாக வைத்து நாயகி பாவத்தில் திருக்கோவையார் பாடியுள்ளார். இது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதற்கான  ஏக்கப்பொருளாகும். இறைவனைத் தேடுதலால் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் எனப்படும்.  

அவர் போலவே கலிங்கப் பகுதியான ஒடிஷாவில் வாழ்ந்த ஜெயதேவரும் கண்ணனை நினைத்து உருகி பாடிய பாடல்கள் "கீதகோவிந்தம் " என்ற பெயரில் வடமொழி பக்தி இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்றது.

அவருடைய பாடல்கள் சிலவற்றுக்கு உருவகம் கொடுத்து நாற்பது அல்லது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்காட்டி வெளிவந்திருந்தது.

வெறும் கோட்டு ஓவியமான அச்சித்திரங்களின் அழகில் மயங்கி  ஒரு சிலவற்றை  நான் ஒரு வரைபுத்தகத்தில் என் விடுமுறை நாட்களின் போது வரைந்திருந்தேன்.  அப்புறம் அது எங்கு போயிற்றோ, மறந்தே போனேன்.

சென்ற ஆண்டு திடீரென்று என் சகோதரிக்கு அப்புத்தகம் கிடைத்து அதிலிருந்த சில படங்களை வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி வைத்தாள். மிகவும் கசங்கிப் போயிருந்த தாள்கள், கோணலான காமிரா கோணம்   ஆனாலும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. 

உடனே அதை மடிக்கணினிக்கு மாற்றி அதை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன்.  அதன் விளைவே கீழே உள்ள படங்கள். மென்பொருள்  Paint 3D.






எனக்கு வாட்ஸ்-ஆப்பில் வந்த வடிவம் மேலே !!!   வலதுபுற மூலையில் ஜெயதேவரின் பாடல் ஆங்கில மொழிபெயர்ப்பில் கொடுக்கப்பட்டிருந்தது.

அதன் சாரம்,  'கண்ணன் தன் காலிற்கு மருதாணி இட்டு அழகு பார்க்கும் பாங்கை   ராதை வியந்து போற்றுவது' எனக் கொள்ளலாம்.

மெஹந்தி அல்லது மருதாணி  மிகப்பழமையான அலங்காரப் பொருளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எகிப்தியர்களின் பயன்பாட்டிற்கும் பழமையான ராமாயண காலத்திலிருந்தே மருதாணியின் பயன்பாட்டின் குறிப்பு நம் இலக்கியங்களில் காணப்படுகிறது. தற்காலத்தில் தென்னிந்திய திருமணங்களிலும் "மெஹந்தி" விழாவாகவே இடம் பெற்று விட்டது. அதற்காக ஏராளமாக பணம் செலவழிக்கிறார்கள்.

பாரம்பரியத்தில் பணத்தைத் தேடுவதே மனிதரின் குணமாய் போயிருப்பது கலியின் பிரபாவம். !!






Tuesday, November 1, 2022

எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு

 பல சமயங்களில் நாம் பெறும் சில உணர்வுகளை  நம்மால் சொல்லில் வடிக்க முடியாத போது  அதை அப்படியே படம் பிடித்தது போல் ஒருவர் வார்த்தைகளில் உருவகித்து விட்டால் நம்முடைய இயலாமை என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ் பழமொழி. ஆங்கிலத்தில் இதை " Face is the index of the mind' என்பர். ஆனால் பிராணிகளின் கண்களில் நாம் காணும் உணர்வுகளை எப்படி உள் வாங்குகிறோம்?

ஒரு பசுவின் கண்களில் இருக்கும் அமைதி, மானின் கண்களில் உள்ள மிரட்சி, புலி அல்லது சிங்கத்தின் கண்களில் காணப்படும் தன்னம்பிக்கை  என்று சொல்லிக் கொண்டே போகலாம்.  அவைகளுடைய குட்டிகளின் கண்களில் தெரியும் ஒரு அப்பாவியான கண்ணோட்டத்தை எப்படியெல்லாம் கார்ட்டூன் படங்களில் சித்தரிக்கின்றனர் என்பதை பார்க்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்.

சமீபத்தில் ஒரு சிம்பன்சி குரங்கை கணினியில் வரைந்து பல வாட்ஸாப் குழுமங்களில் பகிர்ந்து கொண்டேன்.  பலரும்  அதன் கண்களை மிகவும் சிலாகித்து நல்ல உயிரோட்டத்துடன் இருக்கிறது என்று பாராட்டினர்.  இதற்கான காரணம் கீழ்கண்ட  மேற்கோளை கண்டபின் தான் நமக்குள் எழுகின்ற உணர்வுக்கு  எப்படி உருவகம் கொடுத்துள்ளார் என்பது புரிந்தது.

If we look straight and deep into a chimpanzee's eyes, an intelligent self-assured personality looks back at us. If they are animals, what must we be?”
― Frans de Waal


மனிதர்களின் மரபணுக்களில் 98 விழுக்காடு ஒத்துபோகும் மனிதக் குரங்குகளின் வாழ்க்கைமுறையும் கூட்டுக் குடும்பமாகவே காணப்படுகின்றன. அவைகளின் ஆயுளும் 60 வயது வரை நீடிக்கும்.

மனிதர்களுக்கும் சிம்பன்சி குரங்களுக்கும் சில பொதுவான குணங்கள் உண்டு என்கின்றனர்.  

 அனுதாபம் :  சிம்பன்சிகளுக்கும் சந்தோஷம், குறும்பு, விளையாட்டு போன்ற குணங்கள் உண்டு. கூடவே  பிறனுடைய கஷ்டத்தை தம்முடையதாக பாவிக்கும் பண்பும் உண்டு.  உதாரணத்திற்கு அனாதரவான இளம் குட்டிகளை தத்து எடுத்து தம் அரவணைப்பில் வளர்க்கும் குணமுடையன இவை. ஆபத்துகாலத்தில் மனிதர்களின் உதவிக்கும் விரைந்து செயலாற்றக் கூடியன.

பெரியோருக்கு மரியாதை : கூட்டுக்குடும்பம்  நிலைத்து நிற்க இது மிகத் தேவை போலும். மூத்த உறுப்பினர்கள் இளம் தலைமுறைக்குத் தேவையான வாழ்க்கை முறை அனத்தையும் கற்றுத்தருகின்றன. பிறந்ததிலிருந்து சில வருடங்கள் வரை தாயினுடைய அணைப்பிலேயே வளருகின்றன. 

இவைகளின் முகம் மற்றும் கைகளின் உரோம வளர்ச்சி அல்லது வர்ண மாற்றங்களைக் கொண்டு அவைகளின் வயது வித்தியாசப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறதாம். முக்கியமாக தக்க வயதினரிடையே இனச்சேர்க்கைக்கு இது ஒரு முக்கிய அளவுகோலாகக் கொள்ளப்படுகிறதாம்.

பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலும் மிக புத்திசாலித்தனமாகவும் கூட்டு முடிவு எடுப்பதிலும் மனித குரங்குகள் தம் தனித்தன்மையை வெளிப்படுத்துகின்றன. பல சமயங்களில் தேவைப்படும் போது காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே பிரத்யேக சாதனங்களை உருவாக்கும் திறமை வாய்ந்தவை அவை. 

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது  Frans de Waal  சொல்வது போல் " .....if they are animals what must we be? " என்று கேட்கத்தான் தோன்றுகிறது. 

 [- இவரைப் பற்றி அறிய   இங்கே சுட்டவும்   ] 

நம்ம ஊர் பழைய திரைப்படப் பாடலையும் நினைவூட்டுகிறது. " எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு"




Tuesday, December 7, 2021

வடிவான வண்ண மூக்கான் -டூகான்

 மனிதர்களில் யாராவது  பொறுப்பு இல்லாமல் அதிகம் பேசினால் 'ரொம்ப வாய் நீளம்' என்று சொல்வதுண்டு.  தென் அமெரிக்காவில் ஒரு வகைப் பறவைக்கு  நிஜமாகவே எல்லாவகையிலும் வாய் நீளம்தான். 

டூகான் ( Toucan)  என்றழைக்கப்படும் இப்பறவைகள் மிகவும் இரைச்சல் வாய்ந்தவையாம்.  அதுவும்  பிற பறவைகள் யாவும் அமைதியாக இருக்கும் மதிய  நேரங்களில் தான் இவைகளின் தனிக் கச்சேரி.

ஆப்பிரிக்காவில் காணப்படும் ஹார்ன்பில் பறவைகளைப் போன்றே மிகப் பெரிய எடுப்பான அலகுகள் கொண்டிருந்தாலும் இவைகள் முற்றிலுமாக வேறு பிரிவை சேர்ந்தவை. இவைகளை மரங்கொத்தி பறவைகள் வகையில் சேர்க்கின்றனர். பழங்களை மிகவும் விரும்பி சாப்பிடும் இப்பறவைகள் புழு பூச்சி மாமிசம் போன்றவற்றையும் கூட தின்னும் ஒரு சர்வ பட்சிணி. 

கிளிகளை போலவே இவற்றையும் பிடித்து வந்து வீட்டில் வளர்க்கின்றனர் மேல்நாட்டவர். காடுகளில் இவை சிறு சிறு கூட்டமாக வாழும்.  மரப்பொந்துகளில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும்.


முழுவதும் வளர்ந்த டூகானின் நீளம் 25 அங்குலம். அதில் மூன்றில் ஒரு பங்கு (7.5 அங்)  அதன் அலகே ஆக்கிரமித்துக் கொள்கிறது. எப்படி இவ்வளவு பெரிய அலகை தூக்கிக் கொண்டு பறக்கிறது என்ற ஆச்சரியம் ஏற்படலாம்.  உண்மையில் அவை மிகவும் எடைகுறைந்த  கெரடின் (keratin) என்கிற பொருளால் ஆனது. நமது உடலில்  நகங்கள், தலைமுடி போன்றவையும்  இதே கெரடினால் வளர்பவை. ஆகையால் தான் அதன் அலகு ஒரு சுமையே அல்ல.

இதன் ஆயுள் சுமார் இருபது வருடங்கள்.

சாதாரணமாக பல வண்ணச் சிறகுகளை பறவைகளில்  காணும் நமக்கு டூகானின் பல வர்ணங்களுடைய அலகுகளே ஒரு புது விஷயம். இந்த விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டவை இவை. டூகானின் ஒரு அழகிய வண்ணப்புகைப் படத்தை மொபைல் ஸ்க்ரீன்சேவராக கண்ட போது அதை என் வரைபட புத்தகதில் வரைந்து கொண்டேன். வர்ணப்பென்சிலில் வர்ணமும் பூசிப் பார்த்தேன். அதை வலது பக்கத்தில் காண்கிறீர்கள்.

இன்னமும் பளிச்சென்று வரவேண்டும் என்று தோன்றியது. இருக்கவே இருக்கிறது நம் கணினி.

வரைந்த படத்தை ஸ்கேன் செய்து அதில் டிஜிடல் வர்ணத்தை பூசினேன்.  இப்போது குடும்பப் பெண்ணுக்கு நட்சத்திர அலங்காரம் செய்தது போல் பளிச்,பளிச், -காமெரா ரெடி !!!

மனிதர்களுக்குத் தான் அலங்காரம் செய்து அழகு பார்க்க வேண்டியிருக்கிறது, இறைவனின் படைப்பில் வேறு எல்லாமுமே இயற்கையிலேயே மிகவும் அழகு வாய்ந்தவை தான்-காமெரா ரெடி தான்,

இல்லாவிட்டால் அந்த ஸ்க்ரீன்சேவர் என் மனதை கவர்ந்திருக்குமா?

Monday, May 17, 2021

மயிரிழையில் ஊசலாடும் திறமை

 நாம் வரைகின்ற ஒரு ஓவியத்தின் சிறப்பே அதில் காணப்படும் நுணுக்கங்களில் அடங்கி இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் detailing என்று சொல்கிறார்கள். அது  பறவைகளின் சிறகாகவோ  மரம் செடிகளின் இலை வடிவங்களோ, துணியின் இழைகளோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

இதில் வெள்ளைத்தாளில் வரையும் படங்களில் வெள்ளை வர்ணங்களை பிரித்துக் காட்ட  முயலும் போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. குறிப்பாக நரை முடி, தாடி போன்றவை சரியாக வராது. அப்போது அதன் உயிரோட்டமே குன்றி விட்ட மாதிரி தோன்றும். 

இந்த  குறையை, என்  திணறலை, என்னுடைய பழைய பதிவுகளில்- பாலசந்தர்   பிஸ்மில்லாக்கான்     காஞ்சி பெரியவர்  போன்றவர்களின் படங்களைப் பார்த்தால்    வாசகர்களுக்குப் ஓரளவு புரியும்.

சமீபகால சில யூட்யூப் காணொளிகளில், பின்னணியில் சற்றே grey shade காட்டி  அதன் மேல் வெள்ளை வர்ணத்தை தூரிகையால் காட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்.  பென்சில் வரைபடமானால் -சில சித்திர விற்பன்னர்களின் முறைப்படி - ஊசி முனையினால் கீறிக் கொண்டு வரையும் விதத்தை  வெளிப்படுத்தியுள்ளார்கள்.  பயன்படுத்தும் வரைதாள் சற்று தடிமனாக இருக்க வேண்டும்..

   


இன்னும் விவரமான காணொளி ( https://www.youtube.com/watch?v=RQ1rdwMycy4)

ஆனால் இதில் ஒரு விஷயம் என்ன புரிந்தது என்றால் இதற்கு பயன்படுத்தப்படும் வரைதாள் மற்றும் பென்சில்களின் -சார்கோல்- தரம் இவற்றைப் பொருத்து வரைபடத்தில் அதன் பரிமாணம் வெளிப்படும்.

சமீபகாலமாக நான் கணினி முறையில்  படம் வரைதலை பழகி வருவதால் இதையும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. அதன் விளைவே கீழே காணும் படம்.



இதற்கு நான் பயன்படுத்திய மென்பொருள் Krita மற்றும் Paint 3D .

Krita வில் முக்கியமாக படம் வரைவதற்கும் பின்னர்  3D வர்ணம் பூசுவதற்கும் பயன்படுத்தினேன். நரைமுடி தாடி விஷயத்திற்கு வருவோம். இந்த மென்பொருட்களில் இருக்கும்  நீர்வண்ண பிரஷ் , பென்சில் , ஆயில் கலர், கிரேயான், போன்றவற்றுடன் Fine tip pen என்ற ஒன்றையும் கொடுத்திருக்கிறார்கள். அதை பயன் படுத்தியே மேலே காணும் மயிரிழைகளை ஓரளவு இயற்கையாக கொண்டு வர முடிந்தது. 


இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் நல்ல உபகரணங்கள் இருந்தால் கிட்டத்தட்ட பாதி வேலை முடிந்த மாதிரிதான்.  என்னுடைய பழைய முயற்சிகளை விட இம்முறை சற்று முன்னேற்றம் கண்டிருக்கிறேன்  என்ற மன நிறைவும் வருகிறது. 

இதைத்தான் மயிரிழையில் ஊசலாடும் திறமை என்கிறேன் :)))

Friday, January 8, 2021

சித்திரமும் மவுஸ் பழக்கம் - 5 :

      வெகு நாட்களுக்குப் பின் இன்னொரு படத்தை கணினி மென்பொருளைக் கொண்டு  வரைய முயற்சி செய்தேன்  -Digital colouring. 

அதன் விளைவே கீழே காணும்  படம். பென்சிலால்  காகிதத்தில் வரைந்து பின்னர் ஒளிவருடி (scanner) மூலம் கணினிக்கு ஏற்றினேன். அதன் பின்னர் வர்ணங்களை மைக்ரோசாஃப்ட்  Paint 3 D மென்பொருள் கொண்டு பூசினேன்.  முழு படத்தையும் பதிவின் கடைசியில் பார்க்கலாம்.  சரி , யார் இவர் ?

 
சென்ற நுற்றாண்டில்  வாழ்ந்து  மக்களிடையே தர்மத்தின் அவசியத்தை போதித்த   மகான் ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகளே இவர். 

இவரை தமிழ் நாட்டில் பலருக்கும் தெரியாது. ஸ்ரீ தத்தாத்ரேயரின் வழி அவதூதராகக் கருதப்படும் இவரது வரவு பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதாம்ருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாயம் நாற்பத்தியொன்றில் "ஸ்ரீதரன் என்ற மகாயோகியின் சீடர்கள் மூலம்  தன் பிறந்த ஊரான  பிதாபுரத்தில்  ஒரு சமஸ்தானம் எழுப்பப்பட்டு தன் பாதுகைகளை வைத்து பூஜிக்கப்படப்  போவதை   அறுநூறு ஆண்டுகளுக்கு  முன்பே ஸ்ரீபாத வல்லபர் சொல்லி வைத்திருக்கும் செய்தியை படிக்கலாம்..

   அவர் சொல்லியபடியே மஹான் ஸ்ரீதரின் சீடரான சஜ்ஜனகடா ஸ்ரீராமஸ்வாமியின் பெரு முயற்சியால் பிதாபுரத்தில் ஸ்ரீபாத வல்லபரின் சமஸ்தானம் 1960 களில் எழுப்பப்பட்டு  வெகு விமரிசையாக  இப்போது ஸ்ரீ தத்த ஆராதனை நடைபெற்று வருகிறது.  கீழே உள்ள காணொளியில் ஸ்ரீ ராமஸ்வாமி தன் குருவிற்கு குரு பூர்ணிமையன்று செய்யும் பூஜையை காணலாம். 


ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகள் கர்நாடகாவில் குல்பர்கா அருகே சின்சோலி என்ற கிராமத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி 1908 வருடம் அவதரித்தார்.

    ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா இவரைப் பற்றி சிஷ்யர்களிடம் குறிப்பிடும் போது “நான் மிகவும் கால்நடையாகவே  நாடெங்கும் சுற்றியிருக்கிறேன். ஸ்ரீதர சுவாமிகளைப் போல தேஜஸ்வியும் தபஸ்வியும் கண்டதில்லை. அவர் இயல்பிலேயே அகண்ட பிரம்ம நிஷ்டையில் உள்ள பூரண ஞானி.” என்று சொல்லியிருக்கிறார்.

     மா ஆனந்த மயி ஸ்ரீதர சுவாமிகளை சந்தித்தப்பின் “பரமார்த்தம் என்னும் சிகரத்தை அடைய மிக குறுகிய கஷ்டமான மலைப்பாதையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.ஸ்ரீதர சுவாமிகளோ ஏற்கனவே அதன் உச்சியை அடைந்து நிலைப்பெற்று விட்டவர்” என்பதாக அவருடைய அனுபவத்தைக் கூறியிருக்கிறார். 

 மகரிஷி இரமணர் காலமான பிறகு அவருடைய அணுக்கத் தொண்டரான பிரபாவதி ராஜே ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகளை தரிசித்து ஆசிர்வாதம் பெற்ற பின் “ சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீ இரமணரையே உணர்ந்தேன்” என்றார். 

   1958 December  4 தேதி  சென்னை வந்திருந்தபோது தாம்பரத்திற்கு அருகே ஒரு பள்ளியில் ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி (பெரியவா என்று அன்புடன் அழைக்கப்படும் பரமாச்சாரியார்) அவர்களை ஸ்ரீதரர் சந்தித்து அளவளாவினார். அவருடைய உரையின் மையக்கருத்தை பரமாச்சாரியரே தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக விளக்கியபின் “நரன் நாராயணன் ஆக முடியும் என்பதற்கு ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகளே ஒரு ஆதர்சமாகும்” என்று அவரின் தவ வலிமையைப் போற்றினார்.

     சமர்த்த ராமதாசரே தருமத்தை நிலைநாட்ட மீண்டும் அவதரித்துள்ளார் என்று பலரும் நம்பினர். அவர் பல ஆண்டுகள் வெளி உலக தொடர்பு இன்றி தனிமையில் தவமியற்றினார். 

   ஷிவமொக்கா அருகே வரதாபுரம் என்கிற அவருடைய ஆசிரமத்தை, ஸ்ரீ சத்யசாயி பாபா அவருடைய குழாத்துடன் அடைந்தபோது யாவரையும் நிசப்தத்துடன் இருக்கும்படி கூறி அங்கே தவமியற்றுபவர் சாட்சாத் பிரம்மாவே என்றுரைத்தார். ஸ்ரீதர சுவாமிகளும் சிறிது நேரம் வெளியே வந்து யாவரையும் ஆசீர்வதித்தார். 

 1927-ல் ராமநாமத்திலும், சுவாமி சமர்த்த ராமதாசரின் தாசபோதத்திலும் ஈடுபாட்டுடன் மேற்கொண்ட தவ வாழ்க்கை பெரும்பாலும் ராமதாசரின் சமாதியுள்ள ஸஜ்ஜனகடாவிலும் பின்னர் வரதாபுரத்திலும் கழிந்தது. 

ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சனாதன தருமத்திற்கு புத்துயிர் கொடுத்தார். கடைசி எட்டு ஆண்டுகள் தனிமையில் வரதாபுரத்தில் தவம் செய்து 19-4-1973 அன்று மஹாசமாதி அடைந்தார். 

 அவர் பன்மொழி புலமைபெற்றவர். வடமொழி,கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு என எல்லா மொழியிலும் பேசி எழுதும் திறமை பெற்றிருந்தார். வடமொழி, மராத்தி கன்னடத்தில் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்.  அவரைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு  இங்கே  சுட்டவும் .

                                                 (பெரிதாக்கிப் பார்க்க படத்தை சுட்டவும்)