Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Friday, June 6, 2008

எல்லாமே வயத்துக்குத் தாண்டா -2

"உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டே " என்று பள்ளியில் சண்டைப் போட்டுக் கொண்டவனுடன் -ஒருவன் காதை மற்றவன் பிடித்துக் கொண்டு- வாத்தியார் முன் தோப்புகரணம் போட்டதுண்டு. இந்த குரங்காட்டியும் குரங்கும் வாழ்க்கை பூராவுமே அப்படித்தானோ ?

அவனுக்கு குரங்கை விட்டால் வழியில்லை, குரங்குக்கும் அவனை விட்டால் கதியில்லை.

பாழும் வயிறு படுத்தும் பாடு யானையை சைக்கிள் ஓட்டச் சொல்கிறது. குரங்கை நாட்டியமாட வைக்கிறது. மனிதனை இவைகளை ஆட்டிப் படைக்கச் சொல்கிறது.

எல்லாமே வயத்துக்குத் தாண்டா! இல்லாத கொடுமைக்கு தாண்டா!!



முதலில் புகைப் படத்தைப் பார்த்ததும் வெயிலில் வாடிய குரங்காட்டியின் முகம் மேற்கண்ட பல உணர்வுகளைத் தூண்டியது. அவனது முகத்தின் சுருக்கங்களும், பெரிய அழுக்கு மூட்டையும் (அதற்குள் என்னென்ன இருக்குமோ ?) தோள் மேல் குரங்கும் அதை கட்டிப்பிடிக்கும் ஒரு தடித்த சங்கிலி கோர்த்த வார் என வண்ணக் களஞ்சியமாக காட்சியளித்தது.

எங்கோ, போன இடத்தில் கண்ட அப்படத்தை ஒரு கையில் கிடைத்த ஒரு சிறிய அட்டையில் வண்ண பென்ஸில் கொண்டு வரைந்து விட்டேன். ஊர் திரும்பிய பின் அதையே சற்று பெரிதாக்கி செய்யலாமே என்று தோன்றியது.

உடனே அதை ஸ்கானரில் போட்டு கறுப்பு வெள்ளையில் A4 தாளில் ட்ராஃப்ட் பிரதி எடுத்திக்கொண்டு வர்ணங்களை பேஸ்டல் கட்டிகளை வைத்து செய்தேன். இப்போது பென்ஸிலில் வரைந்த மூலத்தை விட பளிச்சென்று காட்சியளித்தது. அட! இதுவும் ஒரு நல்ல டெக்னிக் போல இருக்கே என்று தோன்றியது.

படத்தில் சரியாக வருமோ வராதோ என்று நான் கவலைப் பட்ட விஷயம் எது தெரியுமா ?

குரங்காட்டியின் காதில் சொருகியுள்ள பீடித்துண்டு !