Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, December 31, 2009

சித்திரமும் (நம்பிக்)கைப் பழக்கம்

இன்றைய இடுகையில் உங்களுக்கு, நான் எழுதிய சித்திரத்தைக் காட்டப் போவதில்லை. என்னையும் என் போன்ற பலரையும் வெட்கி தலைகுனியச் செய்யும் சில அற்புத கலாவிதர்களை அடையாளம் காட்டப் போகிறேன். என் வலைப்பூவின் தலைப்பையே இவர்கள் அர்த்தமற்றதாக்கி விட்டார்கள்.

அவர்களுக்கு நம்பிக்கை ஒன்றே துணை. சித்திரமும் (நம்பிக்)கை பழக்கம்

அவர்களை சந்திக்க இதோ இங்கே சுட்டவும் Mouth-Foot Painting Artists

கைகள் இன்றி, வாயினாலும் கால்களினாலும் இவர்கள் படைத்துள்ள காவியமாகும் ஓவியங்களை கண்டு களிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சுயசார்புக்கான திட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் படைப்புகள் நாட்காட்டிகளாகவும், வாழ்த்துஅட்டைகளாகவும் விற்பனைக்கு உள்ளன. அவற்றை வாங்கி நமக்கு வேண்டியவர்களுக்கு அனுப்பி அவர்களின் உழைப்பின் மதிப்பை மக்கள் மத்தியில் பரவலாக்கலாம்.

புதிய ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக திகழட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Friday, December 11, 2009

நீ எங்கே ...என் நினைவுகள் அங்கே !

இயற்கையின் விநோதங்களைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமான ஆச்சரியம்.

இம்முறை எனது ஆச்சரியம் இந்த பறவை அமர்ந்திருக்கும் இடம்.

பூக்கொத்துகளின் நுனியில் அது அமர்ந்து யாருக்கோ
“நீ எங்கே ஏஏ..எஎ என் நினைவுகள் அங்கே !”
என்று டி.எம்.எஸ் குரல் கொடுப்பது போல தோற்ற மளிக்கிறது. ? :)))

அந்த ’யாரோ’ கீழே இலை நடுவே ஒளிந்து கொண்டு போக்கு காட்டுவது போல் காணப்படுகிறது. மெல்லிய கிளை நுனியில் பறவையை தாங்க வேண்டுமானால் அந்தப் பறவை எவ்வளவு சிறியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆச்சரியம்.

ஒரு நிமிடத்துக்கு இருபதினாயிரம் முறை சிறகடிக்கும் தேன்சிட்டுப் பறவையின் அளவு நம் கட்டை விரல் அள்வு மட்டுமே!. [ இது தேன்சிட்டு அல்ல ]


இது நீர் வர்ணப் படம். பழைய காலண்டரில் வெளியானது. சிங்கிள் ஸ்ட்ரோக் முறைப்படி முயற்சி செய்யப்பட்டது. அதாவது பென்சில் ஸ்கெட்ச் இல்லாமல் நேரடியாக, இடத்திற்கு தகுந்த தடிமன் உள்ள ப்ரஷ்களை தேர்ந்து ஒரு போக்கிலேயே வரைவு மற்றும் வர்ணம் இரண்டையும் சாதிக்க வேண்டும்.

அப்படி ஒன்றும் சிரமமான வேலையில்லை என்பது புரிந்தது.

வரைதாள் நீரை உடனே உறிஞ்சிக் கொள்வதாய் இருந்தால் நலம். 1997-ல் வரைந்தது. சுமார் அரைமணி நேரத்தில் முடிந்தது என்று நினக்கிறேன்.
அளவு 30 cm x 20 cm.

Monday, November 9, 2009

ஆடும் தின்னாது உங்க ஆப்பிளை !

ஆரம்ப கால மாணவர்களுக்கு ஓவியப் பள்ளியில் கொடுக்கப்படும் முக்கியப் பயிற்சி ஜடப் பொருள்களை வரைவது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். (ஏன்னா நாந்தான் அங்கே காலை வச்சதில்லையே). அதிலும் ஒளி நிழல் வேறுபாடுகளை கொண்டு வருவது தான் தலையாயப் பாடமாம். பல பெரிய ஓவியர்கள் பூக்கூடைகள், பழக்கூடைகள், மேஜை மேல் சிதறிக் கிடக்கும் புத்தகங்கள், கசங்கி கிடக்கும் காகிதக் குப்பை போன்றவற்றைக் மிகவும் நுணுக்கமாக வரைந்திருப்பது கண்டு அதிசயித்து இருக்கிறேன். இப்போதும் அதிசயிக்கிறேன்.

அந்த வகையிலே முயற்சி செய்ததுதான் இந்த ஆப்பிள் பழங்கள். ஒரே வித்தியாசம் என் முன்னால் ப்ழங்கள் இருக்கவில்லை. ஒரு புகைப்படப் பத்திரிக்கையில் வெளி வந்திருந்த வண்ணப் புகைப்படந்தான் இருந்தது.



பேஸ்டல் வர்ணங்களை ஆரம்பித்திருந்த காலம். கீழ் பக்கத்தில் ஒரு சிறிய இடைவெளியில் கசியும் வெளிச்சம் மற்றும் அந்த வெளிச்சத்தின் வழியாக தெரியும் இலைகளின் காம்பு எனக்கு முக்கியமாகப் பட்டது. அதன் விளைவாக நிழலை அடர்த்தியாக்கப் போய் நிழலின் அடர்த்தி கொஞ்சம் ஓவராகவே போய் விட்டது. நிழலிலும் ஆப்பிள் காம்பு போலத் தெரிகிறதே ஆனால் மேலே உள்ள ஆப்பிளில் காம்பு எதுவும் காணப்படவில்லையே என்று குழப்பம் ஏற்பட்டது.

சற்று யோசித்தபின் அது பழங்களின் நடுவில் இருக்கும் இலையின் நுனி பாகமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.

அதுக்குதான் சொல்றது ஈயடிச்சான் காப்பி அடிக்கக்கூடாதுன்னு. ஓவியப்பள்ளிக்கூடத்தில் செய்வது போல கண்ணு முன்னாலே வச்சு வரைஞ்சிருந்தா இந்த குழப்பம் வந்திருக்குமா ?:))

ஆப்பிளைப் பத்தி பேசும் போதெல்லாம் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் சொன்னதை படிச்சது ஞாபகம் வருது. ஷேக் அப்துல்லாவை கோடைக்கானலில் மனை சிறை வைத்திருந்த காலத்தில் சேஷன் திண்டுகல் கலெக்டர். ஷேக் அப்துல்லா ஆப்பிள் பழங்களை கேட்டார் என்று வாங்கிக் கொண்டு போய் கொடுத்தால் அதைப் பார்த்து ’எங்க காஷ்மீர்-ல ஆடு கூட தின்னாது உங்க ஆப்பிளை ’ என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டாராம். அடேங்கப்பா அவ்வளவு விசேஷமானதா காஷ்மீர் ஆப்பிள் என்று தோன்றியது அப்போது. இப்போதும் என்ன வாங்கிற மாதிரியா விலை இருக்கு !

பார்த்தே சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.

Friday, October 16, 2009

உயர உயரப் போகிறேன்...நீயும் வா

பழைய திரைப்படப் பாடல். “நாநாநான் உயர உயரப் போகிறேஏஏன்...நீயும்.ம்ம்ம்ம்/வா”. டி.எம்.எஸ் அந்த ’வா’வை ஒரு வெட்டு வெட்டி பாடுவார். குடிகாரன் ஒருவன் பாடுவது என்று சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் என்னமோ இந்த அன்னப் பறவையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்தப் பாட்டுதான் நினைவுக்கு வரும்.

ஒரு சின்ன ப்ளைவுட்-ல் எப்போதோ வரைந்தது. ஆயில் வர்ணம் மங்கிப்போய் வானத்தில் பல ’பொத்தல்கள்’ விழுந்து ஒரு மாதிரியாக இருந்தது. அதை ஸ்கேன் செய்து கொஞ்சம் கணிணியின் பெயிண்ட் பிரஷ்-ல் சரி கட்டிய பின் தான் ’சரி எல்லோருக்கும் காட்டலாம்’ ங்கிற தைரியம் வந்தது.

ஹம்ஸம் அல்லது அன்னம் அப்படிங்கிற இந்தப் பறவை பற்றி நம்ம இதிகாசங்களில் கூட அடிக்கடி சொல்லப்படுது. ஆனா அது இப்ப நாம பார்க்கிற ஸ்வான் மாதிரி இருந்ததான்னு தெரியாது. கோவில் சிற்பங்களில், குத்து விளக்கில் காணப்படுகிற அன்னத்திற்கு மயில் மாதிரி உடல்,கால் தோகை, தலை மேல் கொண்டை எல்லாம் இருக்கும். ஆனால் அலகு மாத்திரம் கொஞ்சம் நீண்டு வாத்து அலகு மாதிரி இருக்கும்.

அன்னம் பிரம்ம தேவனின் வாகனம். தூய்மை,பற்றற்ற நிலை,பிரம்ம வித்தை மற்றும் எல்லா உயிர்களுக்குள் இயங்கும் பிராண சக்தியைக் குறிப்பதுன்னும் சொல்லுவாங்க. பறவைகளில் இது ஒன்றுதான் (?) நிலம் நீர் மற்றும் விண்ணில் சம அளவில் இயங்கக் கூடியதுன்னும் சொல்வதுண்டு.

அத்வைதத்தில் மிக உயர்ந்த பற்றற்ற நிலையை அடைந்தவரை குறிப்பிடும் போது பரமஹம்ஸர் என்று குறிப்பிடப்படுகின்றனர். காரணம், எவ்வளவு நேரம் நீரில் இருந்தாலும் ஒரு துளி கூட அது மேல ஒட்டாது. அது போல பரமஹம்ஸர்கள் எவ்வளவுதான் உலத்தாரோடு ஒட்டி உறவாடினாலும் அவர்கள் மனசி்லேயும் சிறிதளவும் பாதிப்பு இருக்காது.

சோஹம் சோஹம் (”நானே அது”) அப்படின்னு மனதில் சொல்லிக்கொண்டு மூச்சை கவனிக்கிற டெக்னிக் ஒண்ணு இருக்கிறதா சொல்வாங்க. அதுவும் இந்த ஹம் சா -ங்கிறதிலேந்து வந்ததுதான். அதனாலத் தான் அதை ப்ராணசக்தியோடு தொடர்பு படுத்தி சொல்றாங்க.

புத்த மதத்திலும் கூட....... ”தம்மாத்தூண்டு படத்த வரஞ்சுட்டு வுடற ரீலுக்கு அளவில்லையா ?” அப்படீன்னு யாரோ திட்றாங்க. அதனால இத்தோட நிறுத்திக்கிறேன்.

எல்லோரும் சந்தோஷமா தீபாவளி கொண்டாடுங்க. தீபாவளி நல்வாழ்த்துகள்

Thursday, August 13, 2009

கொப்பரை மேல் வெளிப்படும் கலையார்வம்

கர்நாடகத்தில் விழாக்களில், குறிப்பாக திருமணங்களில், கைவினைக் கலைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இப்பொழுதும் பரவலாகக் காணப்படுகிறது. அதில் வகை வகையான மஞ்சள் பொட்டலங்கள், கொப்பரைக் கிள்ளல்கள் மிகவும் பிரபலமானவை. சுப சடங்குகள் நிறைவேறியதும் சுமங்கலிகள் அனைவருக்கும் மஞ்சளும் குங்குமமும் அடங்கிய சிறு பொட்டலங்கள் வினியோகிக்கப்படும். இந்த வழக்கம் நாசூக்கான பல வித உருவகங்களோடு கைவினைப் பொருளாக தத்தம் திறமைகளையும் ஈடுபாட்டையும் உற்சாகத்துடன் காட்டுவதற்கான சாதனம் ஆகியுள்ளது.

என்னை மிகவும் கவர்ந்தது கொப்பரைக் கிள்ளல் தான். சுமார் இருபது வருடம் முன்பு வரையிலும் அவரவர் குடும்ப உறுப்பினர்களாலே செய்யப்பட்டு வந்தது. தற்போது வணிக ரீதியாக கடைகளிலே கிடைக்கிறது. இதை ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் யாவரும் செய்கின்றனர். சில மாதிரிகளை இங்கே பாருங்கள்.




ஒரு கொப்பரைக்கு மூன்று முகங்கள். ஒவ்வொரு முகத்திலும் ஒரு படம் இருக்கும். ஏழுமலையான், சங்கு, சக்கரம் என ஒரு காம்பினேஷன்; சிவன் பார்வதி, நந்தி, ஒரு மலர் என்று இன்னொரு காம்பினேஷன் இப்படி எந்த பக்கத்தை திருப்பினாலும் ஒரு நல்ல வேலைப்பாடு கண்ணில் படும் படியாக வடித்திருப்பார்கள்.

கொப்பரையின் மேல் பக்கத்தில் உள்ள தோலை மெல்லியதாக சீவி எடுக்கும் போது அடிப்பாகத்தில் வெள்ளைப் பகுதி வெளிப்படும். தக்க வைக்கப்படும் தோலே படத்தின் வரைவடிவம் ஆகிறது. அடிப்பக்கமான வெள்ளை வர்ணம் பின்ணணி ஆகிறது.

தோலை மிக நுணுக்கமாக ஒரே அளவில் எடுக்க வேண்டும். படங்களில் மிக மெல்லிய கோடுகள் தெரியும்படி மற்ற பகுதிகளை கிள்ள வேண்டுமானால் எவ்வளவு ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

புலிகளை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது.

நானும் இதை முயற்சித்துப் பார்த்தேன். மிக மிக எளிமையான படத்தை (சிவலிங்கம், திரிசூலம்) வரைந்து கொண்டு ஒரு பிளேடின் நுனியால் கிள்ள ஆரம்பித்தேன். சிறிது நேரத்திலே எலி கொறித்தது போல் தெரிய ஆரம்பித்தது. மனம் தளராத விக்கிரமன் போல் மீண்டும் தொடர்ந்தேன். கிள்ளுவதற்காக பிளேடில் கொடுக்கப்படும் அழுத்தம் மறுபக்கத்தில் விரல் சதையையும் பதம் பார்த்தது. ரத்தம் வருவதுதான் பாக்கி. உப்பும் புளியும் உள்ள சாம்பார் (அ) ரசம் சேர்த்து சாப்பிடும் போது விரல் எரிச்சல் எடுத்தது.

ஒருவழியாக சிவலிங்கம் ஒரு வடிவம் பெற்றதும் திரிசூலத்திற்குத் தாவினேன். விரலைக் காப்பாற்றிக் கொள்ள பேனாக் கத்தியை வைத்து கிள்ளத் தொடங்கினேன். அதன் நுனி ப்ளேடை போல மென்மையாக இல்லாதததால் கிள்ளலும் வன்மையாகப் போயிற்று. வெள்ளை பின்ணணி குண்டும் குழியுமாக காட்சியளித்தது. அதைத் தான் கீழே பார்க்கிறீர்கள்:))


எப்படியோ ஒரு வழியாக திரிசூலமும் உடுக்கும் தெரியும்படியாகச் செய்து விட்டேன். உடுக்கு, கம்பத்தில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி மாதிரி தெரியுது என்கிற கிண்டலையும் கேட்டாச்சு. :)))

தங்கமணி இந்த கொப்பரையை சமையலுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று பலமுறைக் கேட்டும் மறுத்து வந்த நான் இப்போது கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்.

நமக்கு ஒரு இடுகைக்கான மேட்டர் முடிஞ்சுதே !

[இந்த இடுகை தர்ஷிணி அவர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன் :) ]

Thursday, July 23, 2009

ஹைதர்- திப்பு- கோட்டை

கோவையிலிருந்து குருவாயூர் திருச்சூர் செல்ல விரும்புவோர் பாலக்காடு வெளிப்பாதையில் சென்று விட வாய்ப்புகள் அதிகம். அப்படி செல்லாது சற்று உள்ளே சென்றால் ஒரு அழகிய கோட்டையைக் காணலாம். இதை திப்புசுல்தான் கோட்டை என்றும் ஹைதர் அலி கோட்டையென்றும் கூறுகின்றனர்.

பொதுவாகவே கோட்டை என்றால் கவனிப்பாரற்று இடிபாடுகள் நிறைந்ததாகக் காணப்படும் என்ற என் எண்ணம் இந்த கோட்டையை கண்டதும் மாறியது. இதற்காக இந்திய தொன்பொருள் மேம்பாட்டுக் கழகம் (ஆர்கியாலிஜிகல் ஸர்வே ஆஃப் இண்டியா) பாராட்டப் படவேண்டும்.

1766ல் ஹைதர் அலியால் கட்டப்பட்டக் கோட்டை பல கடுமையான போர்களை கண்டது. ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலி மற்றும் அவன் மகன் திப்புவுக்கும் இடையே பலமுறை கைமாறியது. இன்று இதனுள்ளே சில அரசாங்க அலுவலகங்கள், ஒரு அருங்காட்சியகம், சிறைச்சாலை என பல நடவடிக்கைகளுக்கு மையமாகி இருக்கிறது. கோட்டையின் வெளியே அகழிகள் மிக சுத்தமாகக் காணப்பட்டது. சுற்றிலும் புல்தரை பூங்கா என சுற்றுலா வருகையாளர்களை கவரும் வகையில் பராமரித்து வருகின்றனர்.

இந்த படம் ஃப்ளைவுட் பலகையில் ஆயில் வர்ணத்தில் வரையப்பட்டது. மேல் பக்கத்திலிருந்து கீழே வந்திருக்கும் போகன்வில்லா என்னுடைய சேர்க்கை. உண்மையில் அங்கே ஒரு பெரிய மரத்தின் கிளைகள் தாழ்வாக வந்து கோட்டையின் மேல்பக்கத்தை மறைத்துக் கொண்டிருந்தது. அது போலவே பாலத்தின் இருதூண்களும் நன்றாக தெரியும்படி வெளிர்நிறமாக மாற்றினேன். புகைப்படத்தில் அவை கோட்டையின் பின்னணியில் மறைந்து விட்டிருந்தன.


அந்த மரத்தை கூகிள் செயற்கைக்கோள் படத்தில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளேன். அதிலே அந்த மதில் சுவர் பாலம் இவற்றையும் காணலாம். சுற்றிலும் அகழி நீரால் சூழப்பட்ட எவ்வளவு அழகாக அமைக்கப்பட்டக் கோட்டை இது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

போய்க் காண ஆசையாயிருக்கிறதா? இங்கே இநத சலனப் படத்தின் இணைப்பில் கோட்டைக்குள்ளே ஒரு சுற்று சுற்றி வரலாம்

Thursday, July 9, 2009

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா

காஞ்சுபோன கருவேலங்காடு, பச்சை-ங்கறது மருந்துக்கு கூட இல்லை அதுக்கு நடுவிலே இப்படி கலர் கலரா ஒரு பறவை.

இந்த படத்தை ஃபிளிக்கரில் பார்த்த உடனே வரைந்து பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது. இந்த குருவி காணப்படுவது தென் ஆப்பிரிக்காவிலாம். நம்மூர் குருவி போலத்தான் இருக்கு ஆனா மல்டி கலர்.



சாதாரணமா என்னுடைய படமெல்லாம் A4 சைஸ்குள்ளே தான் இருக்கும். கொஞ்சம் பேராசைப்பட்டு பெரிய அளவில் ஆரம்பித்து விட்டேன். அதுவும் பேஸ்டல் வர்ணம். கடைசியில் அது ஸ்கேனருக்குள்ளே அடங்கவில்லை.

எவ்வளவுதான் முயற்சி பண்ணினாலும் பேஸ்டல் வர்ணத்தில் வெள்ளை வர்ணம் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. இதனால் வெளிச்சத்தினால் வரும் ஒளியூட்டல் சரியாக எடுபடவில்லை. குறிப்பாக கழுத்தின் அடிப்பக்கம், பிண்ணணியில் தெரியும் வெளிச்சம் போன்றவற்றை எடுத்துக் காட்ட இயலவில்லை.

ஹும்ம்ம்ம்... கத்துகிறதுக்கு நெறைய இருக்கு

Saturday, June 27, 2009

செய்யும் தொழிலே தெய்வம்

இவர் தன் திரை அனுபவங்களை வாரப் பத்திரிக்கை ஒன்றில் தொடராக எழுதி வந்த பொழுது படித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

எல்லோரையும் விட படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்து விடும் இவருக்கு ஒருமுறை கூட நடிகர் சிவகுமாரை முந்திக் கொண்டு வர முடியவில்லை. எப்பவுமே அவர்தான் முந்தி.

ஒருமுறை எப்படியாவது சிவகுமாரைவிட முன்னதாகப் போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு (யாருக்கும் அது பற்றி மூச்சு விடாமல்) வழக்கத்தை விட எல்லா வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு அரைமணி நேரம் முன்னதாகப் படபிடிப்பு தளத்துக்குப் போய் சேர்ந்தார். இவர் எண்ணங்களை டெலிபதியில் தெரிந்து கொண்டாரோ என்னவோ மேக்கப் மேன் நாற்காலியிலிருந்தபடியே வணக்கம் சொல்லி இவரை வரவேற்றார் சிவகுமார்.


வாழ்க்கையில் இவர்கள் பெற்ற வெற்றிகளுக்கு வேறு காரணமே தேவையில்லை.

செய்யும் தொழிலே தெய்வம்.

Tuesday, June 2, 2009

அச்சச்சோ ரெட்டையா !!

ஹாங்காக் நகரத்தில் வசிக்கும் ஒரு ஓவியரைப் பற்றிய ஒரு குறிப்பு ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் சில வருடங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது.

அவருடைய தனித்தன்மை என்னவென்றால் எந்த ஓவியத்தைக் காட்டினாலும் அதை அச்சு அசலாக மூலத்தைப் போலவே வரைந்து கொடுத்துவிடுவாராம். அதை ஒரு தொழிற்சாலை போலவே உதவி ஆட்கள் வைத்துக் கொண்டு செய்து வருகிறாராம். அவரை போலவே அந்நகரில் மிகப் பலரும் வெற்றிகரமாக தொழில் நடத்தி வருவதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் அது மிக டென்ஷனான வேலையென்றும் அகில உலக சந்தையில் மூலப்பிரதிகளுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் விலை கிடைப்பதால் நகல் ஓவியங்களை ”புராதனமான ஓவியர்களின் மூலம்” என்று விற்கக் கூடிய கள்ளச் சந்தை உருவாகி இருப்பதால் அதிக சட்டத் தொல்லைகளுண்டு என்றும் குறிப்பி்ட்டிருந்தார்.

நமக்கு அது மிகப் பெரிய விஷயம். சமயங்களில் நாம் வரைந்த சில ஓவியங்களையே யாராவது மீண்டும் வரைந்து கொடுக்கச் சொன்னால் நம்மால் அதே ஈடுபாட்டுடன் திரும்பவும் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. அதைத் தீர்க்க இன்று ஒரு வழியை காண்போம். இது ஏற்கனவே பழைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது தான்.

சென்ற பதிவில் வ்ரையப்பட்டிருந்த மழலையே இம்முறை வண்ண வடிவில்.

மிக மங்கலாக ஜெராக்ஸ் செய்யப்பட்ட நகல் படத்தில் வெவ்வேறு விதமாக பென்சில் மற்றும் பேஸ்டல் வர்ணம் பூசினேன். சாதாரண பாண்ட் தாளில் எடுக்கப்பட்டத்தால் வர்ணங்கள் பரவுவதில் சற்று வித்தியாசம் இருந்தது. பரீட்சார்த்தமானதாகையால் பரவாயில்லை என்று வர்ணம் பூசுவதை தொடர்ந்தேன்.

வேண்டுமென்றே தலை முடிக்கான வர்ணத்தையும், பூவாலைத் துண்டுகளின் வர்ணத்தையும் மாற்றினேன். விளைவு இரட்டைக் குழந்தைகள். இன்னும் முனைப்பாக செயலாற்றினால் ஒரே மாதிரியான படங்களை இன்னும் நல்ல விதமாக உருவாக்க முடியும் எனத்தோன்றுகிறது.

அதாவது நல்ல நகல்களை உருவாக்க முடியும் :))

யாருக்காவது அன்பளிப்பாக கொடுக்க இயலும்.

நகல் எடுக்கும் பொழுது நல்ல வரைதாளில், எண்ணெய் பிசுக்கு இல்லாமல் பார்த்து செய்தால் உங்களுடைய மூலப் பிரதிக்கும் நகலுக்கும் யாராலும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு செய்ய முடியும். ( விரல்களில் இருக்கும் எண்ணெய் பசை தாளில் ஒட்டிக்கொண்டால் பின்னர் அந்த இடங்களில் வர்ணங்களை ஒட்டவிடாமல் செய்யும். அப்போது அவை திட்டுத்திட்டாகத் தெரியும்.)

கொசுறு : ஜெராக்ஸ் எடுக்கப் போன இடத்தில் மூன்று பிரதிகளை எடுக்கச் சொன்னேன். அந்த பெண் செட்டிங்கை மாற்றி நாலாவது பிரதி எடுக்க முற்பட்டபோது வேண்டாம் தேவையில்லை என்று தடுத்தேன். அவள் புன்னகையுடன் “எனக்கும் ஒரு காப்பி” என்று தனியே எடுத்து வைத்துக் கொண்டாள்.

நல்ல ஓவியத்திற்கு இதைவிட என்ன அங்கீகாரம் வேண்டும் !!


Monday, May 25, 2009

கண்ணால் பேசும் மழலை

குழந்தைகளால் ஈர்க்கப்படாதவர்கள் இருக்க முடியாது.

பிராணிகளின் குட்டிகளாகட்டும், பறவைகளாகட்டும் அவற்றின் கவர்ச்சியே பெரிய்ய்ய்ய்ய கண்கள்தாம். கார்ட்டூன் படங்களிலும் உயிரோட்டம் தருவது பெரிய கண்களை உருட்டி உருட்டிக் காட்டப்படும் பலவிதமான உணர்ச்சிகளே.

பல சிறப்பான வரைபடங்களை பார்க்கும் போது கண்களை வரைவதில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியே தனித்து தெரியும். அப்படி ஒரு வலைப்பூ வை சமீபத்தில் பார்த்த தாக்கம் தான் கீழே காணும் குழந்தையின் படம்.

அவர்களின் உழைப்பு மலைக்க வைக்கிறது. அவர்களின் தரத்தை எட்டிப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே :(

ஆயினும் நமக்கு படம் வரைவதில் உற்சாகம் குன்றாமல் இருக்கிறதே அதற்காக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

குழந்தையின் கன்னம் வழ வழ என்று வர வேண்டுமானால் அழுத்தமான கோடுகள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த படம் முழுக்க முழுக்க பென்சிலை சுரண்டி எடுத்த கரிப் பௌடர், இரப்பர் அழிப்பான் மற்றும் விரல்ககளால் விரவுதல் செய்து வரையப்பட்டிருக்கிறது.

கற்றுக்கொண்ட முக்கிய பாடம் என்னவென்றால் மிக மிக மெல்லிய கரி பூச்சு கூட சுற்றி இருக்கும் பகுதிகள் அழிப்பானால் அழிக்கப்படும் பொழுது எடுப்பாகத் தெரிகிறது. அதனால் ஒளியின் மிக குறைந்த அளவு வேறுபாடுகளையும், தோல் சுருக்கங்களையும் வெளிக்கொணர முடிகிறது.

உபயோகப்படுத்தப்பட்ட பென்சில் (நேரடி பயன் பாடு மிகக்குறைவே) 2B.

கூடிய விரைவில் இதையே வர்ணத்தில் செய்ய முயற்சிக்கிறேன்.

எப்பப் பார்த்தாலும் பழைய படங்களையே போட்டு கொண்டிருப்பது என்னமோ போலிருந்தது. அதனால்தான் இம்முறை பிரத்யேகமான புத்தம் புது படம் :))

Saturday, May 9, 2009

இயற்கை வளைவு

செய்வதற்கு குறிப்பாக வேலை ஏதுமின்றி அமர்ந்திருந்த போது எதிரே கிடந்த பத்திரிக்கையில் வெளியாகியிருந்த புகைப்படம் ஆர்வத்தைத் தூண்டியது.

இது ஒரு ink & watercolor படம்.

கறுப்பு மையினால் லைன் டிராயிங் முடித்து பின்னர் நீர்வர்ண பென்சில்களால் அங்கங்கே கற்களின் பரிமாணம் தெரியும் வண்ணம் ஆரஞ்சு, மஞ்சள், நீலம், பச்சை வர்ணங்களை தேய்த்தேன்.
கடைசியாக வர்ணங்கள் ஒன்றோடு ஒன்று கரைந்து இணையும் வகையில் சிறிது நீரில் தோய்த்த பிரஷ்ஷினால் ஒரு பூச்சு கொடுத்தேன். ஓரிரு தினம் அதை இப்படி அப்படி வைத்து அழகு பார்த்தபின் அது எங்கே போயிற்று என்பது பற்றி நினைவு கூட இல்லாமல் மறந்து போனேன்.

சமீபத்தில் வேறு எதையோ தேடிக்கொண்டிருந்த போது திடீரென்று இது கண்ணில் பட்டது.

”எனக்கு உன் வலைப்பூவில் இடம் கிடையாதா” என்று கேட்பது போல் தோன்றியது :))

இந்த வளைவு எங்கே இருக்கிறது எவ்வளவு பெரியது என்ற விவரங்கள் இல்லாமல் எப்படி பிரசுரிப்பது என்று யோசித்தேன்.

தேடுவதில் சில நாட்கள் சென்றது. நான் நினைத்தது போல் ஆப்பிரிக்காவில் இல்லாமல் இது வட அமெரிக்காவில் உள்ள இயற்கை வளைவு ஆகும். உலகத்திலே மிகப்பெரியது எனலாம். 52 அடி உயரம் உடையது. காற்றின் அரிப்பால் இங்குள்ள செம்பாறைகளில் குடைவுகள் உண்டாகி ஏற்பட்டிருக்கும் வளைவு இது.

உடா (Utah) மாகாணத்தில் காணப்படும் 500 க்கும் மேற்பட்ட இயற்கை வளைவுகளில் இது மிகவும் பிரசித்தமானது. இதன் பெயர் Delicate Arch. அங்கே இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட இயற்கை சரகமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு பேணப்படுகிறது.

எப்போதாவது வாய்ப்பு கிடைச்சா போய் பார்க்க ஆசைதான் :))

Monday, April 13, 2009

திகில் படங்களின் நாயகன்

இந்த மனிதரின் கண்களில் தெரிவது என்ன ?

ஆழ்ந்த சிந்தனையா ?

அல்லது எதிரே பேசுகிறவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் நிலையா?

இப்படத்திற்கு ஆதாரமான புகைப்படத்தை பிரசுரித்த பத்திரிக்கைக்கு அந்த சமயம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபடியால் இரண்டாவதே சரி.

கண்களில் தெரிகின்ற நிலைக் குத்தான பார்வையும், அதற்குத் துணை போகும் வகையில் அழுத்தமாக முகவாய்கட்டையை தாங்கும் கைகளும் மற்றும் கன்னத்தை அழுத்தி இருக்கும் விரல்களும் ஒரு நல்ல படத்தை முயற்சித்துப் பார்ப்பதற்கு போதுமான விஷயங்கள் என்று தோன்றியது.

முதலில் படம் முழுவதையும் வர்ண பென்சிலில் வரைந்து கொண்டு பின்னர் வர்ண அழுத்தம் தேவைப்படும் இடங்களில் பேஸ்டல் வர்ணத்தில் பூர்த்தி செய்தேன். அந்த வகையில் இது ஒரு mixed media படம் என்று சொல்லலாம். இதற்கானக் காரணத்தை கபில் தேவ் பற்றிய பதிவில் விளக்கி யுள்ளேன்.



(பிற்சேர்க்கையில் விவரம் அறிக)

சரி யாரிந்த மனிதர் என்று கேட்கிறீர்களா; இவர் பெயர் ராம் கோபால் வர்மா.

ராம்கோபால் வர்மா பற்றிய சிறு குறிப்பு

நிசப்த், ஜபர்தஸ்த், ராத், பூத்,சர்கார் ராஜ் போன்ற திகில் படங்களை ஹிந்தி திரைக்கு கொடுத்தவர்.நாற்பதுக்கும் மேலான ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் இயக்குனரும் ஆவார். அமிதாப், அபிஷேக் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை வைத்து படம் எடுப்பது மட்டுமல்லாமல் அதிகம் அறிந்திராத கலைஞர்களையும் வைத்து படம் எடுப்பவர். ஹிந்தி திரை உலகில் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவர்.

பின் குறிப்பு:
வரைபடத்தை முறையாக பாதுகாக்காமையால் சில இடங்களில் மடிப்புகளும் சுருக்கங்களும் ஸ்கேனரிலும் விடாமல் ஒட்டிக்கொண்டு வந்துள்ளன. ஆகையால் உங்கள் படங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம் :))


பிற்சேர்க்கை :
வடுவூர் குமார் அவர்களின் பின்னூட்டத்தைக்கண்ட பின் அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தது. உடனே என்னோட குறுக்கு மூளை சும்மா இருக்குமா ! எப்படி கஷ்டபடாமல்  வர்ண அழுத்தத்தைக் கூட்டுவது என்று யோசித்தேன். அப்படியே பிக்காஸாவில் படத்தை திறந்து  Auto contrast ஐ கூட்டிப் பார்த்தேன். ஓரளவு திருப்தியாக இருந்தது.  உடனே வலையேற்றி விட்டேன். :)))

நன்றி குமார் !
!

Wednesday, April 1, 2009

தாயும் சேயும் : மகிழ்ச்சிக்கு ஏது தடை ?

இன்று Slide Share என்கிற வலை தளத்திலிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

Hi Kabeeranban,

We've noticed that your slideshow on SlideShare has been getting a LOT of views in the last 24 hours. Great job ... you must be doing something right. ;-)

Why don't you tweet or blog this? Use the hashtag #bestofslideshare so we can track the conversation.

Congratulations,
-SlideShare Team


ஒரே நாளில் வந்த பார்வையாளர்கள் சுமார் 20000. பின்னூட்டம் 0 !! : )))

ஆனால் slide share தளத்தினர் இதை best of slide share வகையில் சேர்க்க விழைந்துள்ளனர் என்பது ஆறுதலான விஷயம்.

கடந்த நான்கு மாதங்களாக ஆயிரத்துக்கும் குறைவாக பார்வையிடப்பட்ட அந்த விளக்கப்படம் எந்த புண்ணியவான் (களின்) ட்வீட்டர் தயவாலோ என்னவோ ஒரே நாளில் பெருமளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருகிறது.

அந்த விளக்கப் படத்தை ’தாயின் அன்பு’ என்கிற தலைப்பில் கற்கை நன்றே வலைப்பூவில் இடுகையாக்கி இணைப்பும் கொடுத்திருந்தேன்.

அந்த விளக்கப்படத்தில் நான் பயன்படுத்தியது என்னுடைய கீழ்கண்ட ஓவியத்தைதான்.


இந்த படத்தை ஹிந்து பத்திரிக்கையில் வந்திருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து வரைந்திருந்தேன்.

முக்காடிட்டிருக்கும் தாயின் துணியில் தெரியும் மடிப்புகளும் தாயும் சேயும் தம்மை மறந்த களங்கமற்ற சிரிப்பும் இதை வரையத் தூண்டியது.

தாயின் அன்பை கற்கை நன்றே வலைப்பூவில் படிக்க இங்கே .

ஸ்லைடு ஷேர் வலைத்தளத்தில் காண இங்கே

Saturday, March 14, 2009

பிஸ்மில்லா கான் - இசை முனி

மார்ச் 21, 1916 ல் பீஹாரில் பிறந்த பிஸ்மில்லா கான், கங்கா மாயி என்று கங்கை கரையை போற்றியபடி தன் வாழ்நாளெல்லாம் காசியிலேயே கழித்தவர். இவரதுமுன்னோர்கள் போஜ்பூர் அரசவை கலைஞர்கள். ஆனால் ஷெனாய் வாத்தியத்தை உலக அளவில் பிரபலமாக்கிய பெருமை பிஸ்மில்லா கான் என்ற தனி மனிதனையே சேரும்.

1947-ல் இந்திய சுதந்திரம் இவரது இசையுடனே செங்கோட்டையில் பிறந்தது.

அவர் கால் வைக்காத முக்கிய தலைநகரங்களே உலகில் இல்லை எனலாம்.

இந்தியா அரசாங்கத்தின் மிகப் பெரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பெற்று கௌரவிக்கப் பட்டவர்.

வேண்டிய அளவு செல்வம் சேர்ந்த போதும் தனிப்பட்ட வசதிகளை அவர் பெருக்கிக் கொள்ளவில்லை.

”பக்கத்து வீட்டிலே ரம்ஜான் அலி பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை ஊற்றி சூட்டைத் தணிக்க கஷ்டப்படும் போது எனக்கு ஏ.ஸி அறையில் தூக்கம் எப்படி வரும் ?” என்பாராம்.

காசி நகரத்து தெருக்களிலே சைக்கிள் ரிக்‌ஷாவிலேயே போய்வருவார். இசைக் கச்சேரிகளுக்காக எங்கு சென்றாலும் எளிமையான விருந்தோம்பலையே ஏற்றார். ஐந்து நட்சத்திர விடுதிகளை வெறுத்தார். எந்நேரத்திலும் வீடு தேடி வருபவர்களுக்கு் அவர் வீட்டில் உணவு இருக்கும்.

இவர் ஒரு குழந்தை உள்ளம் படைத்த கலைஞர். பணிவு குணத்திற்கு அவர் யாவருக்கும் எடுத்துக்காட்டு.

1971 -ல் நாட்டின் பெரும் கலைஞர்களைக் கூட்டி டெல்லி விஞ்ஞான் பவனில் ஒரு பெரும் இசைவிழா நடத்தியது அரசு. விழாவிற்கு பிறகு அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு பலரும் பாராட்டு கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்தனர். அவற்றின் இடையில் உருது மொழியில் பணிவான ஒரு வேண்டுகோள் கடிதம்.

”ஐயன்மீர்! வரும் வருடங்களில் இவ்விழாவை வேறு ஏதேனும் அரங்கத்தில் வைத்துக் கொண்டால் சந்தோஷப்படுவேன். ஒவ்வொரு வரிசையிலும் பார்வையாளர்களின் முன் போடப்பட்டிருக்கும் மேஜைகள் கலைஞனுக்கும் இரசிகனுக்கும் உள்ள இடைவெளியை அதிகரிக்கிறது”

பிஸ்மில்லாக் கான் அவர்களின் அந்த கடிதத்தை கண்ட பின் விழா காமினி அரங்கத்திற்கு மாற்றப்பட்டது.


அவருடைய கண்களில் ஒரு முனிவனின் தவம் தெரியும். அவர் செய்தது இசைத் தவம். அதை ஓவியத்தில் பிடிக்க முயற்சித்தேன். மிகவும் கஷ்டமாய் போனது. காரணத்தை வெகு காலம் யோசித்தேன்.

கழுத்தை திருப்பியிருக்கும் விதமா?

மூக்கு தூக்கியிருக்கிறதா ?

நெற்றிக்கும் தொப்பிக்கும் உள்ள இடைவெளியா ? தாடியா ?

கடைசியாக எனக்குத் தோன்றியது அவருடைய கண்கள். அவருக்கு சற்றே பூனைக் கண்கள். பலமுறை திருத்தி ஓரளவு பூனைக்கண் போல கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்.

மிச்சத்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

Monday, February 23, 2009

உள்ளும் புறமும் -ஒரு கட்டிடம்

ஒரு மனிதனையோ, மிருகத்தையோ வரையும் போது அதை உயிரோட்டமுள்ளதாக ஆக்குவது ஈடுபட்டுள்ள செயல் மற்றும் கண்கள்.ஆனால் ஒரு கட்டிடத்திற்கு உயிரூட்டுவது பெரும்பாலும் ஒளி-நிழல் விளையாட்டுதான்.

கட்டிடங்களை வரையும் போது மட்டும் 3D வடிவமைப்பு மிகச் சரியாக வரவேண்டும். இயற்கை காட்சிகளானால் அங்கே ஒரு புதரோ, மேகமோ மலையோ வரைந்து ஒப்பேற்றி விடலாம். ஆனால் கட்டிடங்கள் விஷயம் அப்படியல்ல. கொஞ்சம் பிசகினாலும் நன்றாகவே காட்டிக் கொடுத்துவிடும்.

அதற்குக் காரணம் இணைக்கோடுகள் படத்தில் இணையாக வராது. ஆனால் அவை இணைக்கோடுகள்தான் என்பதை நமது மூளை சொல்லுகிறது.படத்தில் தண்டவாளங்கள் தூரத்தில் இணைவதை போலக் கண்டாலும் இணையாது என்பது மூளைக்குத் தெரியும்.இதை vanishing point effect என்று கூறுவார்கள்.

பழைய கோவில்கள்,புராதன கட்டடங்கள் வரையும் போது இந்த வானிஷிங் பாயிண்ட் சரியாக அமையாவிட்டால் பார்ப்பவர்களுக்கு அதை சுட்டிக் காட்டத் தெரியாவிட்டாலும் ”என்னமோ சரியில்லை” என்று கூறுவார்கள். ஜன்னல்கள்,கதவுகள் விளிம்புகள் இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அது சரியாக அமைய வேண்டும்.

பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு ஆராய்ச்சி மையத்தின் ஒரு புகைப்படத்தை கணிணியில் கண்டபோது அதன் ஒளி-நிழல் அமைப்பு, உள்ளும் புறமும் ஒரே சமயத்தில் காட்டப்பட்டிருந்தவிதம், நவீன வடிவமைப்பு எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை வரையத் தூண்டியது.


Ink and color முறையில் வரைந்தது.

உட்பக்கமும் வானம் நோக்கிய ஒரு புல்தரை, வெளிப்பக்கமும் ஒரு புல்தரை. தூரத்தில் இருக்கும் திறந்த ஒரு கதவில்லா சாளரம். அதிலிருந்து பரவும் ஒளி, அங்கே ஒரு கல் பெஞ்சு, வெளிப்பக்கம் வளைந்து செல்லும் கல் கட்டிட வடிவமைப்பு, முகப்பில் ஒரு தகவல் பலகை இப்படி பல ருசிகரமான விவரங்கள் எப்படி வடிவெடுக்கும் என்பதை காணவே வரைந்து பார்த்தேன்.

கருப்பு வர்ண -நீரில் கரையாத- மையினால் படத்தை வரைந்து கொண்டு பின்னர் வர்ணம் தீட்டப்பட்டது.

வானிஷிங் பாயிண்ட் தெரிகிறதா சொல்லுங்கள் :)

Tuesday, January 27, 2009

பால் திருடும் பறவை

உணவு பழக்க வழக்கங்கள் ஊருக்கு ஊர், நாட்டிற்கு நாடு மாறுபடும். வளர்ப்பு பிராணிகளும் ஓரளவு மனிதனோடு சேர்ந்து இருப்பதாலோ என்னமோ சில மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றன. உதாரணத்திற்கு தில்லியில் அன்னத்தை நாய்களோ பசுவோ எதுவும் சீந்தாது. ஏன் காக்கைக் கூட எட்டி பார்க்காது.

அந்த ஊரில் காலையில் வீதியில் திரியும் பசுவைத் தேடிப்போய் ராத்திரி மிச்சமான ரொட்டியை கொடுத்தால் ஆனந்தமாக சாப்பிடுகிறது. நம்மூர் பசுக்களுக்கு சப்பாத்தி ருசிக்குமா என்று இன்னும் பரிட்சித்து பார்க்கவில்லை.

ஆனால் பறவைகள் புதிய உணவு முறைகளை கண்டறிந்து கொள்வதில் உள்ள வியப்பை கிரேட்-டிட் எனப்படும் இந்த பறவையை வைத்து ஆராய்கிறார்களாம்.

இது இங்கிலாந்தின் குருவி. துருதுருவென்று எப்போதும் கழுத்தையும் வாலையும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டு இங்கும் அங்குமாக தவ்வித் திரியும். காலையிலே பால்காரன் வண்டி பின்னாலேயே தொடர்ந்து போகும். வாசலிலே பாட்டிலை வைத்து சென்றவுடனே அதன் மேல் அமர்ந்து மூடியிருக்கும் அலுமினியம் ஃபாயிலை துளையிட்டு பாலை குடிக்க ஆரம்பிக்கும்.

அதனால் அந்நாட்டில் பால் வழங்கும் முறையையே மாற்ற வேண்டியதாகப் போயிற்று!!

இந்த பால் தனக்கும் கூட உணவாகும் என்பதை எப்படி கண்டு கொண்டது ? துளையிட்டால் குடிக்க முடியும் என்பதையும் குறிப்பிட்ட நபர்களின் வருகைக்கும் பால் பாட்டிலுக்கும் உள்ள தொடர்பையும் எப்படி தெரிந்து கொள்கிறது. ? இவையெல்லாம் தான் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம்.
நமக்கு இறைவன் படைப்பில் எல்லாமே அதிசயதக்கதுதான். எறும்பு ’சர்க்கரை’ என்ற லேபிளைப் பார்த்தா சர்க்கரை டப்பாவை கண்டுகொள்கிறது ! எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவன் அதற்கு தேவையான அறிவையும் கொடுத்தே படைத்திருக்கிறான்.

பறவைகளைப் பற்றிய வர்ணத் தொடர் ஒன்றை செய்யலாம் என்றெண்ணி ஒரே அளவான அட்டையில் செய்த இரண்டாவது (கடைசி)படம் இது.

என்ன காரணத்தினாலோ இதை அப்போது(20 வருடத்திற்கு முன்) தொடர முடியவில்லை. முதலாவது தான் சென்ற பதிவில் பார்த்த மீன்கொத்திப் பறவை. திரும்பவும் அதே வகை அட்டை (அஞ்சல் அட்டை அளவு) கிடைத்தால் செய்யலாம் என்று இருக்கிறேன்.

Thursday, January 1, 2009

புது வருடம் சிறக்க - ஒரு கிரேக்க நாட்டு கதை

காற்றுக் கடவுளுக்கு அல்ஸியோன்( Alcyone) என்றொரு மகள். அவளுடைய கணவன் கடலிலே போனவன் திரும்பவில்லை. அவனுடைய கப்பல் விபத்தில் மூழ்கியது கேட்டு அவளும் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் வாயுவின் புத்திரி ஆயிற்றே. அவர்கள் இருவரையும் மீன்கொத்திப் பறவைகளாக்கி உயிர்ப்பிக்கிறார்.

நம் ஊர் கதை போலவே, அவர்களுக்கு ஒரு வரமும் அளிக்கப் படுகிறது. அவைகள் கடலில் மிதக்கும் கூடுகள் அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலத்தில் கடல் எவ்வித அலைகளும் இல்லாமல் புயல் சூறாவளி இல்லாமல் அமைதி காக்கும். அப்படிப்பட்ட அமைதிக்கு ஹேல்ஸ்யன் (halcyon) என்று பெயர். கதையை முடித்து விடுவோம். அதன் பின்னர் அவைகள் ஆனந்தமாக வாழ்ந்தன.

இந்த கதையை நினைவூட்டூம் வகையில் தான் இந்த பறவைகளுக்கு Alcedo atthis, Halcyon smyrnensis என்ற பலவாறாக பெயர்கள் சூட்டியுள்ளனர் உயிரியல் வல்லுனர்கள்.

இந்த அல்ஸியோன் வகை மீன்கொத்தியைக் கண்டால் (கடலில்)அமைதி வரும் என்ற நம்பிக்கை மாலுமிகளுக்கும் மீனவர்களுக்கும் உண்டாம். இதை ஷேக்ஸ்பியரும் தன்னுடைய ஹாம்லெட் -ல் குறிப்பிட்டிருக்கிறாராம்.

(ஹி..ஹி..நான் அதெல்லாம் படிச்சது இல்லீங்க. நெட்-ல சுட்டினது தான் :-)))

Some say that ever 'gainst that season comes
Wherein our Saviour's birth is celebrated,
The bird of dawning singeth all night long;
And then, they say, no spirit can walk abroad;
The nights are wholesome; then no planets strike,
No fairy takes, nor witch hath power to charm,
So hallow'd and so gracious is the time.

Hamlet, I, i 157


ஆகையினாலே மீன்கொத்தி பறவையை தரிசனம் செய்தால் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையொடு, இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு போஸ்ட் கார்டு அளவிலான அட்டையில் வரையப்பட்ட மீன்கொத்தி பறவையை தரிசனம் செய்து கொள்ளுங்கள்.



இது நீர் வர்ணத்தில் வரையப்பட்டது.

கிங்ஃபிஷர் என்று சொன்னாலும் இங்கே நீங்கள் பார்ப்பது குயின் ஃபிஷர் தான் !

எப்படின்னு கேட்கிறீங்களா ? ராணிக்கு மட்டும் தான் அலகின் அடிபாகத்தில் சிவப்பு வர்ணம் இருக்குமாம்.

எப்படியோ, ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா வருஷ பலனை கணிச்சுகிட்டிருக்காங்க. நமக்கு Halcyon தரிசனமாயிடுச்சு. எல்லாம் நல்ல படியாகவே நடக்கும்.

God Bless, 2009 be a Halcyon Year.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.